சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற உணவுகள், பழங்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண்ணை (வாட்ஸ் அப்) மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடைக்காலத்தையொட்டி, அதிக அளவிலான பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், கடைகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்பதை பொதுமக்கள் கவனித்து வாங்க வேண்டும். மேலும், பழச்சாறுக்குப் பயன்படுத்தப்படும் பழங்கள், ஐஸ், பால், தண்ணீர் ஆகியவை நல்ல முறையில் உள்ளதா என்பதையும், அந்தக் கடை இருக்கும் பகுதியும், பழச்சாறு தயாரிப்பவரும் சுத்தத்தைக் கடைப்பிடிக்கின்றனரா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், உணவுகள், பழச்சாறு, பழத்துண்டுகள் ஆகியவற்றை தரமற்ற பிளாஸ்டிக் கப்புகள், பைகளில் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
புகார் எண்: சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தரமற்ற உணவுகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டால் 94440-42322 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.