பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்தபதி, முன்னாள் இணை ஆணையர் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த முத்தையா ஸ்தபதி தாக்கல் செய்த மனு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சிலை விவகாரம் தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, மார்ச் 26- ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டேன். உடல் நலக்குறைவு காரணாமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இதைத் தொடர்ந்து கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தேன். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜாவும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.