ராமேசுவரத்தில் 4 நாள்கள் தடைக்கு பிறகு முகுந்தராயர் சத்திரம் வரை சுற்றுலா வாகனங்கள் செல்ல அனுமதி
ராமேசுவரத்தில் கடல் அலை சீற்றம் காரணமாக தனுஷ்கோடி செல்வதற்கு 4 நாள்கள் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை முதல் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் வரை செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை முதல் சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடி செல்ல காவல்துறையினர் தடை விதித்தனர். இதேபோல் அக்னி தீர்த்தக் கரையில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டது.
படிப்படியாக கடல் அலையின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து, அக்னி தீர்த்தக் கரையில் புனித நீராட தடை நீங்கியது. செவ்வாய்க்கிழமை வரையில் தனுஷ்கோடி செல்ல தடை இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை முகுந்தராயர் சத்திரம் வரை செல்ல முதல் கட்டமாக அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அலையின் வேகம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை வரை செல்ல அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.