குட்கா முறைகேடு வழக்கை நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கெளபா ஆகியோருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை எழுதிய கடிதம்: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐ அமைப்புக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கியமான இந்த வழக்கு விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடைபெறும் பொருட்டு நேர்மையான, அனுபவமிக்க, வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் விற்பனை, ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள் என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ள இரண்டையும் அப்புறப்படுத்தி, நீதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.