மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாரிசு விவகாரம் தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த உயிரி மாதிரிகள் எதுவும் தங்கள் மருத்துவமனையில் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து குலவழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கில் தீபக் மற்றும் தீபா சார்பில் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் வழக்குத் தொடர்பாக மனுதாரரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, டி.என்.ஏ பரிசோதனை நடத்தத் தேவையில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் ரத்த உயிரி மாதிரிகள் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளதா இல்லையா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வியாழக்கிழமைக்குள் (ஏப்.26) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
ரத்த உயிரி மாதிரிகள் இல்லை: இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவமனையின் சட்டப் பிரிவு மேலாளர் மோகன்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016 செப்.22-ஆம் தேதி முதல் டிச. 5-ஆம் தேதி வரை சிகிச்சையில் இருந்த போது சோதனைக்காக அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மட்டுமே எடுக்கப்பட்டது. சோதனைகள் முடிவடைந்த பின் அவற்றை நாங்கள் பாதுகாத்து வைக்கவில்லை. ரத்தம் மற்றும் சிறுநீரை ஓராண்டுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது சாத்தியமில்லாத ஒன்று.
ஜெயலலிதாவின் உடல் தசைகளை நாங்கள் பரிசோதனைக்காக எடுக்கவில்லை. எங்கள் மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த உயிரி மாதிரிகள் எதுவும் இலைல என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது ஜெ.தீபக் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.எல்.சுதர்சனம், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தும் உயிலின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கும் அவரது சகோதரர் ஜெயராமுக்கும் பிரித்து வழங்கப்பட்டது.
அந்த உயிலில் அம்ருதா பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்றார். அப்போது அம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.பிரகாஷ், இது தொடர்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த தலைசிறந்த தடய அறிவியல் நிபுணரின் அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன்.
இந்த வழக்கின் மனுதாரரான அம்ருதாவும், ஜெ.தீபாவும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பேத்திகள்தான். எனவே தீபாவின் ரத்த மாதிரிகளை எடுத்து மரபணு சோதனை செய்தால் உண்மை வெளியில் வரும் என்றார். இதற்கு ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தொண்டன் சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, ஒருவரை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என்றார். அதற்கு மூத்த வழக்குரைஞர் வி.பிரகாஷ் என்.டி.திவாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் மரபணு சோதனை நடத்துவது தொடர்பாக விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்றார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.