காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமென தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து மெரீனா கடற்கரையில் ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிகள் சனிக்கிழமை உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் அய்யாக்கண்ணு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்த தனி நீதிபதிகளின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த பிறகு சில சட்டவிரோதமான போராட்டங்கள் மெரீனா கடற்கரையில் நடைபெற்றதால், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அங்கு போராட்டங்களுக்கு அனுமதியளிக்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.