மெரீனாவில் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

மெரீனாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சனிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
மெரீனாவில் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமென தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். 

மெரீனா கடற்கரையில் ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணையில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு கூட மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

இந்நிலையில், மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சனிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், காவிரி விவகாரத்தில் அய்யாக்கண்ணு போராட மாற்று இடத்தை தேர்வு செய்தால் அனுமதிப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் போராட்டத்தை சேப்பாக்கத்தில் நடத்தும்போது அங்கே பொதுமக்கள் அதிகமாக கூடினால் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.

முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த பிறகு சில சட்டவிரோதமான போராட்டங்கள் மெரீனா கடற்கரையில் நடைபெற்றதால், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அங்கு போராட்டங்களுக்கு அனுமதியளிக்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com