கோவை: இரட்டை இலை வேண்டும் என்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல்வர் பழனிசாமி கோவை வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்பொழுது அவர் கூறியதாவது:
தினகரனுக்கு அடுத்து இப்போது திவாகரன் அணி அம்மா பெயரை சொல்ல தொடங்கி இருக்கிறது. இரண்டுமே நிற்காது. விரைவில் காணாமல் போய் விடும். தினகரன் கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாள் ஆனது. அதற்குள்ளேயே விரிசல், பிளவு எல்லாம் வந்து விட்டது. திவாகரன் கட்சியைப் பொறுத்த வரை முதலில் நடைமுறைக்கு வருமா என பார்க்கலாம்.
இந்த இரண்டு பேரும் இரட்டை இலை வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளார்கள். இந்த இரு கட்சிகளும் காணாமல் போய் விடும். அதேபோல விரைவில் தினகரன் -திவாகரன் இருவரும் காணாமல் போய் விடுவார்கள்.
எஸ்.வி.சேகர் விவாகாரத்தினைப் பொறுத்த வரை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ள மத்திய படையினர் பற்றிய கேள்விக்கு மத்திய படையினர் பயிற்சிக்காகவே வந்துள்ளனர் என்று அவர் பதிலளித்தார்.