சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரி சந்தானத்திற்கு மேலும் இரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அலைபேசி மூலம் பாலியல் வலை விரித்த பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதேசமயம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்தார்.
மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், சந்தானம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.