சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 'விசில்' செயலியை சென்னையில் கட்சி அலுவலகத்தில் கமல் அறிமுகம் செய்து வைத்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் அவர்களது பகுதியில் நடைபெறும் சமூக சீர்கேடுகள் உள்ளிட்ட தவறுகள் குறித்து கட்சித் தலைமைக்கு தெரியபடுத்தப் பயன்படும் 'விசில்' என்னும் செயலியை அறிமுகம் செய்யும் விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்களன்று மதியம் நடைபெற்றது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளங்களில் செயல்படும் இந்த செயலியை கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உங்கள் பகுதியில் நடைபெறும் தொடர் தவறுகளை பற்றிச் சொல்ல விரும்புவோர் மய்யம் விசில் செயலியில் தெரிவிக்கலாம். இந்த செயலி என்பது பிரச்னைகளை ஒரே நொடியில் சரிசெய்யும் மந்திரக்கோல் இல்லை ஆனால் காவல்துறைக்கு உதவுவதாகவும், விமர்சனம் செய்யக்கூடியதாகும் இருக்கும்.
இப்போதைக்கு இது மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் மட்டும் பயன்படுத்துவதாக இருக்கும். விரைவில் அனைவருக்குமானதாக மாறும்.
நாளை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் நாள். அனுமதி கிடைத்தால் மக்கள் நீதி மய்யம் தத்தெடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தில் நடக்கவுள்ள கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.