"பட்டென்று போனை வைத்து விட்டார் கலைஞர்":  பதறிப்போன கமல்ஹாசனின் நினைவுகள் 

தொலைபேசி உரையாடல் ஒன்றில் 'அப்படித்தான்யா' என்று நான் உறுதியாக சொன்னவுடன் பட்டென்று போனை வைத்து விட்டார் கலைஞர் என்று நடிகர் கமல்ஹாசன் தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிகிறார். 
"பட்டென்று போனை வைத்து விட்டார் கலைஞர்":  பதறிப்போன கமல்ஹாசனின் நினைவுகள் 

சென்னை: தொலைபேசி உரையாடல் ஒன்றில் 'அப்படித்தான்யா' என்று நான் உறுதியாக சொன்னவுடன் பட்டென்று போனை வைத்து விட்டார் கலைஞர் என்று நடிகர் கமல்ஹாசன் தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிகிறார். 

தற்பொழுது உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான  கருணாநிதியுடன், தான் நெருங்கி பழகியது பற்றியும், அதே சமயம் அவருடன் முரண்பட்ட தருணங்கள் பற்றியும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிரபல வார இதழ் ஒன்றில் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பேட்டியளித்துள்ளார்.அதில் இருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு: 

'கலைஞருடன்  நிறைய நெருங்கிப் பழகியிருக்கேன். அதேபோல் அவருடன் முரண்பட்ட தருணங்களும் உண்டு. 1988-னு நினைவு. அப்போ இங்கே கவர்னர் ஆட்சி. ‘நாயகன்’, ‘வேதம் புதிது’, ‘வீடு’, வாலி சார் கதை எழுதின ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம்னு அந்த வருஷம் தமிழுக்கு மொத்தம் எட்டு தேசிய விருதுகள். அப்போ யாரைக் கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்துறதுன்னு தெரியலை. ஜானகி அம்மா, சிவாஜி சார், கலைஞர் மூணு பேரையும் கூப்பிட்டு அவார்டு கொடுக்கவைக்கணும்னு அந்த நிகழ்ச்சியையும் நான்தான் நடத்தினேன். இவங்க இருப்பதால், ஜெயலலிதா வர மாட்டார்கள் என்பதால், நான் அவரை அழைக்கவில்லை.

அந்த விழாவில் எல்லோருக்கும் அவார்டு  கொடுத்த கலைஞர், ‘ரிசர்வேஷனைக் கேலி பண்ற படம். கண்டிப்பா அதுக்கு என் கையால நான் விருது கொடுக்க மாட்டேன்’னு சொல்லி ‘ஒரே ஒரு கிராமத்திலே’ பட இயக்குநர் ஜோதி பாண்டியனுக்கு அவார்டு  கொடுக்க மறுத்துட்டார். அதுக்குக் காரணம், ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம் பிராமணப் பெண்ணான லட்சுமி, தன்னை ஒரு தலித்னு சொல்லி இடஒதுக்கீட்டில் அரசு வேலை பெறுவது மாதிரியான கதைகொண்ட படம். மேலும் ‘பாலம் பழுதுபட்டு இருக்குனு பைபாஸ் போட்டோம்னா, அது எதுக்கு இப்போ போட்டீங்க?’னு கேட்கிற மாதிரி இருக்கு இந்தப் படம்’னு சொன்னார்.

கடைசியில் பேசின நான், ‘பாலம் பழுதுபட்டு இருக்குனு சொன்னீங்க. பாலம் பழுது பார்க்கப்பட வேண்டும். அதுக்கு நீங்க என்ன வேலை சொன்னாலும் அணிலா இருந்து செய்றோம். ஆனால், பைபாஸ் போட்டாச்சு. அது போதும்னு விட முடியாது’னு பேசினேன். பாலம் பழுது பார்க்கப்பட வேண்டும் என்பது பெரிய கொத்தனார் வேலை. 200 வருஷத்துக்கான வேலைனு அதை மனசுல வெச்சு சொன்னேன்.

பிறகு வீட்டுக்குப் போனவர், ‘உன்னைக் கடைசியில பேசவிட்டா, இப்படிச் சொல்லிட்டியே’னு போன்ல கூப்பிட்டு வருத்தப்பட்டுட்டு, ‘இல்ல, நான் பேசினது தப்புனு பிரஸ்கிட்ட சொல்லிடு’ன்னார். ‘இல்ல ரைட்டுனு நீங்கல்லாம் சொல்லிக் கொடுத்ததனாலதான்யா அப்படிப் பேசினேன்’னேன். ‘அப்படியா’ன்னார். ‘ஆமாங்கய்யா’ன்னேன். அவ்வளவுதான், போனை டொக்குனு வெச்சுட்டார். `ஆமாங்கய்யா’னு பளிச்சுனு சொன்ன தொனியில எதுவும் கோவிச்சுகிட்டாரா கேளுங்க’னு அவர் பக்கத்துல உள்ளவங்ககிட்ட சொன்னேன். ‘அவன் மேடையில சொல்லிட்டான். இப்பப்போய் மாத்திச் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை. தவிர நான் சொன்னது ரைட்டுனு சொல்றான். அவனை இனிமே புத்தி சொல்லித் திருப்ப முடியுமா? போயிட்டுப் போறான் விட்டுடு’ன்னாராம். பிறகு அது எதையும் அவர் மனசுல வெச்சுக்கவே இல்லை. '

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com