சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் நலம் விசாரிப்பதற்காக, தனி விமானத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஞாயிறு மதியம் சென்னைவந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக மதியம் 2.45 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு அவரை திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வரவேற்றனர். ஜனாதிபதியுடன் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் உடன் வந்திருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் ஸ்டாலினிடமும் மருத்துவர்களிடமும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜனாதிபதி நேராக விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டார்.
இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்கூறப்பட்டுள்ளதாவது:
திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
அத்துடன் சந்திப்பு குறித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.