சமூக நீதியை நிலைநாட்டியதில் வெற்றி நாயகனாக மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி திகழ்ந்தார் என்று தமிழக அரசு பெருமிதத்துடன் கூறியுள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மரணம் குறித்த தகவல் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பித்தார். அரசிதழில் அவா் கூறியுள்ளதாவது: ஆகஸ்ட் 7-ம் தேதியிட்ட இந்த அரசிதழின் நான்கு புறமும் கருப்பு நிறத்திலான பட்டையுடன் வெளியிடப்படுகிறது. முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதியன்று மாலை 6.10 மணிக்கு மரணம் அடைந்தார் என்பதை தமிழக அரசு வருத்தத்துடன் தெரிவிக்கிறது. கடந்த 1969-ம் ஆண்டில் இருந்து ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார், சமூக நீதியை நிலைநாட்டுவதில் வெற்றி நாயகனாக அவா் திகழ்ந்தார்.
முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியின் மறைவு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் மரணம் குறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்படும் என்று தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, செவ்வாய்க்கிழமை இரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு இருந்தது.