திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய்கிழமை மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின் நடைபெறும முதல் செயற்குழு கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இதுகுறித்து சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்,
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம். கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.