சென்னை: திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் புதனன்று அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.
இந்நிலையில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் வெள்ளியன்று காலை சந்தித்தார். அதன் பின்னர் திமுக அவசர செயற்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், கட்சியின் பொதுக்குழுவை விரைவில் கூட்டுவது தொடர்பாகவும் இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுமென்று தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு யார் என்பதை தீர்மானித்தல், மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு கட்சியின் பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்க வேண்டும். எனவே அதை தீர்மானித்தல் மிகவும் முக்கியமான விஷயமாகும்.
முன்னதாக ஆகஸ்ட் 19-ஆம் தேதி அன்று கட்சியின் பொதுக்குழுவினை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு, பின்னர் கருணாநிதியின் உடல்நலக் குறைபாடு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.