மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளதால், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியது:
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காணப்படுகிறது. இதுதவிர, மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவில் இடி, மின்னல் ஏற்படக் கூடும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்தும், தென் தமிழக கடலோரப் பகுதியில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனம்பாக்கத்தில் 100 டிகிரி: சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடலூர், நாகப்பட்டினம், வேலூரில் தலா 99 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், திருத்தணி, தொண்டியில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.