கொடைக்கானலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறவிருந்த குறிஞ்சித் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள், கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிகழாண்டு அதிக அளவில் பூத்துள்ளன.
குறிஞ்சி மலர்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக, குறிஞ்சித் திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இந்த திருவிழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவையொட்டி, தமிழக அரசு 7 நாள்கள் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது. அதனால் சனிக்கிழமை நடைபெறவிருந்த கோடை குறிஞ்சித் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிஞ்சித் திருவிழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.