ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாயமானது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, டிவிஎஸ் குழும நிர்வாகி வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
கோயில் சிலை மாயமானதுக்கும் டிவிஎஸ் குழும நிர்வாகிக்கும் என்ன சம்பந்தம்? இதில் அவர் முன் ஜாமீன் கோரியது ஏன் என்ற பல கேள்விகள் எழுந்தன.
இன்றைய முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில், வேணு சீனிவாசனைக் கைது செய்ய மாட்டோம் என்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்து.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதில், திடீர் திருப்பமாக வேணு சீனிவாசனின் பெயர் அடிபட்டது எப்படி?
தமிழகத்தில் கபாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேகப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தும் அரசுக் குழுவில் ஒருவராக இடம்பெற்றிருந்தவர் வேணு சீனிவாசன். 2004ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த குழுவுக்கு கோயில் திருப்பணிக் குழு என்று பெயர்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாயமானது தொடர்பான புகார் மனுவை பதிவு செய்திருந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில் திருப்பணிக் குழுவினர் ஒரே நள்ளிரவில் கோயில் சிலைகளை எடுத்துவிட்டு மாற்றி வைத்துவிடுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில்தான், ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுவின் நிர்வாகியாகவும், கோயில் திருப்பணிக் குழு உறுப்பினராகவும் இருக்கும் வேணு சீனிவாசனுக்கு சிக்கல் எழுந்தது.
முன்னதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஏற்கனவே இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் உட்பட பலரை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
இதற்கிடையே, காவல்துறை பதிவு செய்திருக்கும் ஸ்ரீரங்கம் மற்றும் மயிலாப்பூர் கோயில் முறைகேடுகள் குறித்த முதல் தகவல் அறிக்கையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிர்வாகி வேணு சீனிவாசனின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அவரது வழக்குரைஞர் கூறினார். எனினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என்றும், மயிலாப்பூர் கோயில் தொடர்பாக புகார் அளித்த யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில் வேணு சீனிவாசனின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குரைஞர் கூறுகையில் முதல் தகவல் அறிக்கையில் வேணு சீனிவாசனின் பெயர் இருப்பதாக வந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று உறுதி செய்யப்படவில்லை. எனினும் முன் ஜாமீன் மனு கோர முவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.