சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட17 பேருக்கு ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் அந்தக் குடியிருப்பின் மின்தூக்கியை இயக்கும் ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அவர்களை, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், 17 பேரின் நீதிமன்ற காவலை மேலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேரில் 16 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியானதும் அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்.