மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரணநிதி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு புதுச்சேரி சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். கேரளாவுக்கு நிதி அளிக்க தனியாக முதல்வர் நிவாரண நிதி கணக்கு தொடங்கப்படும்.
பொதுமக்கள், வியாபாரிகளிடம் நிதி திரட்டி கேரளாவுக்கு அனுப்பப்படும். மேலும் நிவாரணப் பொருட்களையும் பொதுமக்கள் தாராளமாக வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.