அழகிரி கருத்துக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை: திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் பேட்டி 

திமுகவிலேயே இல்லாத அழகிரி கருத்துக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏவான ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அழகிரி கருத்துக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை: திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் பேட்டி 

சென்னை: திமுகவிலேயே இல்லாத அழகிரி கருத்துக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏவான ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது நினைவிடம் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி வளாகத்தில் அமைக்கப்பட்டது. கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி திங்களன்று தனது குடும்பத்துடன், கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, எனது தந்தையிடம் எனக்குள்ள ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது தற்போது உங்களுக்குத் தெரியாது. கலைஞர் அவர்களுடைய உண்மையான விசுவாசமுள்ள அனைத்து திமுக தொண்டர்களும் என் பின்னால்தான் உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் என்னையே ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்குக் காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்போது, ஆதங்கம் சொந்த விஷயமா? கட்சி தொடர்பானதா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, கட்சி தொடர்பானதுதான் என்று அழகிரி பதில் அளித்தார்.

நாளை நடைபெறும் திமுக செயற்குழுக் கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நான் தற்போது கட்சியில் இல்லை. எனவே, திமுக செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து கோபாலபுரம் சென்ற அழகிரியிடம் செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். அப்போது கட்சியில் பிளவு தொடங்கிவிட்டதா என்ற கேள்விக்கு நான் கட்சியில் இல்லை என்றார். மேலும் கட்சி ரீதியான ஆதங்கம் என்ன என கேட்டதற்கு பொறுங்கள் இப்போது சொல்ல முடியாது, நான் 2 அல்லது 3 நாட்களில் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

கட்சி மற்றும் குடும்பப் பிரச்னைகளால் 2014 மார்ச் மாதம் 25ம் தேதி திமுகவில் இருந்து மு.க. அழகிரி  நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுகவிலேயே இல்லாத அழகிரி கருத்துக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏவான ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏவான ஜெ.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுகவிலேயே இல்லாத அழகிரி கருத்துக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. நாளை நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிப்போம். நாங்கள் தற்பொழுது தலைவர் கருணாநிதி மறைந்த துக்கத்தில் உள்ளோம்.

அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர். திமுகவில் இருந்து யாரும் அவருடன் தொடர்பில் இல்லை. எனவே அவரது கருத்துக்கு பதில் கூற வேண்டிய நிலையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com