அண்ணா தொழிற்சங்கத்தின் ரூ.8 கோடி பணத்தை கையாடல் செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி புழல் சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டார். கோவை, உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.சின்னசாமி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகியாக இருந்த காலத்தில் ரூ.8 கோடி வரை கையாடல் செய்ததாக சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சின்னசாமியை ஞாயிற்றுக்கிழமை இரவு கோவையில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சின்னசாமி, திங்கள்கிழமை அதிகாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை, எழும்பூர் நீதித் துறை நடுவர் ராஜுவ் முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். வரும் 27 -ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து சின்னசாமி புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.