பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16 -ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதையொட்டி, அன்றைய தினம் முதல் பள்ளிகளிலேயே அவர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை ஆணையர் பா. ஜோதி நிர்மலாசாமி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
நிகழாண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 16 -ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து அன்று முதல் ஆகஸ்ட் 30 -ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணியை மேற்கொள்ள, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, பள்ளிகல்வித் துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்.
மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்துக்கு உரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆதார் அட்டை, குடும்பஅட்டை, சாதி சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆதாரங்களுடன் மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்புப் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.