முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக புதன்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் 13 மதகுகளும் திறக்கப்பட்டு, இடுக்கி அணைக்கு 10,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 136.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 6 அடி உயர்ந்து புதன்கிழமை 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் 13 மதகுகளும் திறக்கப்பட்டு, இடுக்கி அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும், தமிழக பகுதிக்கு தலைமதகில் 4 குழாய்கள் வழியாக 2200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் அருகே உள்ள வல்லக்கடவு, சப்பாத்து, உப்புத்துறை பகுதிகளில் பெரியாற்றின் கரையோரம் வாழும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய துணைக் குழு ஆய்வு: முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனால், அணையில் ஏற்படும் மாற்றங்களை பார்வையிடவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர் புதன்கிழமை அணைப் பகுதியை பார்வையிட்டதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.