நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவக் கல்லூரிகள் (இஎஸ்ஐசி) ஆகியவற்றில் உள்ள மருத்துவ இடங்களுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கான பதிவு நடைமுறைகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் (டிஜிஹெச்எஸ்) நடத்துகிறது. இரண்டு கட்ட கலந்தாய்வுகள் நடைபெற்று முடிந்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பாமல் மீதம் உள்ள இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. அதன்படி தமிழகத்துக்கு 98 எம்பிபிஎஸ் இடங்களும், 15 பிடிஎஸ் இடங்களும் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழங்கள், இஎஸ்ஐசி கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் குறித்த விவரம் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 20 -ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படும். கலந்தாய்வு முடிவுகளும் அன்றைய தினமே வெளி
யிடப்படும். இடங்களைப் பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 21 முதல் 26 -ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு சேராத இடங்கள் காலியிடங்களாகக் கருதப்படும். காலியிடங்கள் அனைத்தும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிடம் ஆகஸ்ட் 27 -ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும்.
அந்த இடங்களை நீட் தேர்வு மற்றும் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் அந்தந்த பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.