சென்னை: புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரகுபதி ஆணையம் செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆணையத்துக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஆணைய நடவடிக்கை குறித்து காட்டமான கருத்தை முன் வைத்திருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி ஆணையத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தமிழக தலைமைச் செயலாளருக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததோடு, விசாரணைக்காக அரசு வழங்கிய இன்னோவா காரையும் ஒப்படைத்தார். விசாரணை ஆணைய ஆவணங்கள் மற்றும் கணினியையும் அரசிடம் ஒப்படைத்ததோடு, தனது அலுவலகத்தை எடுத்துக் கொள்வது குறித்து அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், 3 ஆண்டுகள் விசாரணை நடைபெறாமல் இருந்ததற்கு ஆணையம் காரணம் அல்ல.
ஓய்வு பெற்ற பிறகு ஏதேனும் பதவியைத் தேடிச் செல்வது போல் நீதிபதி சுப்ரமணியம் கருத்துக் கூறியிருந்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்படும் வகையில் அமைந்திருந்தது.
ஆணையத்துக்கான தடையை நீக்க பலமுறை நீதிமன்றத்திடம் முறையிட்டும் நீதிமன்றம் அதனை விசாரிக்கவேயில்லை. ஆணையத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாதால் பதவி விலகுகிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்து குறித்து எந்த ஊதியமும் பெறாமல் 45 நாட்கள் விசாரித்து அறிக்கை அளித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.