மருத்துவ முன்னேற்றங்களைக் காட்டிலும் நோய் தடுப்பே மிகவும் முக்கியம் என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். குவாலிட்டி ஹெல்த் நிறுவனத்தின் சார்பில், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கான உடல்நலம் குறித்த பயிலரங்கம்சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:
மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 1900 -களிலேயே தமிழகத்தில் பொது சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பல்நோக்கு மருத்துவமனைகள் வரை நவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அனைத்து மருத்துவ முன்னேற்றங்களைக் காட்டிலும் நோய்த் தடுப்பு என்பதே மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. நோய்களற்ற நலமான வாழ்க்கைக்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவுக் கட்டுப்பாடு ஆகியவை முக்கியப் பங்களிக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் நலம், மன நலம், சமூக நலம் ஆகியவை மிகவும் முக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 900 -க்கும் மேற்பட்ட வாழ்வியல் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளும் முழு உடல்பரிசோதனை மிகவும் அவசியம். முழு உடல் பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்வோர், கூடுதல் மருத்துவ ஆலோசனைகளுக்கும், நம்பகத்தன்மையான ஆலோசனைகளுக்கும் அரசு மருத்துவமனைகளை நாடலாம் என்றார் அவர். மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் கிரிதர், பிரிட்டன் தேசிய சுகாதார சேவைகளின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் சக்தி கருணாநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.