வாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பாரதப் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
வாஜ்பாய் அவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினராக அரிய பணியாற்றியவர். அவசர நிலையின் போது ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். குஜராத்தில் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்ட போது அங்கு ராஜ தர்மம் மீறப்பட்டுள்ளது என பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட வாஜ்பாயின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.