முல்லைப் பெரியாறு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைப்பது தொடர்பாக தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவும், பேரிடர் மேலாண்மை துணைக் குழுவும் பரிசீலிக்க வேண்டும் என உச்ச
முல்லைப் பெரியாறு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைப்பது தொடர்பாக தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவும், பேரிடர் மேலாண்மை துணைக் குழுவும் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு எடுக்கும் முடிவுக்கு தமிழகம் கட்டுப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பேரிடர் மேலாண்மை திட்டத்தை அறிவிக்கக் கோரி கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: 
கேரளத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சூழலை மத்திய, மாநில அரசுகள் திறம்பட கையாள வேண்டும். கேரளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கையாளத் தேவையான வழிமுறைகளை அளிக்க இந்த நீதிமன்றம் நிபுணர் அல்ல. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவும், பேரிடர் மேலாண்மை துணைக் குழுவும் பரிசீலிக்க வேண்டும்.
கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகள், புனரமைப்பு, மறுவாழ்வுப் பணிகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை அந்த மாநில தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீட்புப் பணிகள், புனரமைப்புப் பணிகள் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு அளிக்கும் அறிவுறுத்தல்களை கேரளம் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தைக் குறைக்கும் முடிவுக்கு தமிழக அரசு கீழ்படிய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா, தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கேரளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களை ஈடுபடுத்தத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டத்தின் அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்' என்றார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்டே, ஜி. உமாபதி ஆகியோர் தங்களது வாதத்தில், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அந்தச் சூழலை தமிழகம் உற்று நோக்கி வருகிறது. தற்போதைய சூழலில் அணையின் நீர்மட்டத்தை குறைப்பதற்கு வாய்ப்பில்லை' என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எச்.பி. ராவல், மனோஜ் வி. ஜார்ஜ் ஆகியோர் ஆஜராகி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். அணையின் நீர்மட்டம் 139 அடியை எட்டும் போதே, தேவையான பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேரிடருக்கு பிந்தைய மேலாண்மைத் திட்டத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என்றனர். 
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் (2005) 9-ஆவது பிரிவின் படி அமைக்கப்பட்டுள்ள துணைக் குழு, தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவுடனும், கேரளம், தமிழகம் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடனும் இணைந்து வெள்ளிக்கிழமை கூட்டத்தை நடத்த வேண்டும். 
முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் தொடர் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை குறைந்தபட்சம் 139 அடி வரை குறைப்பதற்கு துணைக் குழுக்கள் முயற்சி செய்ய வேண்டும். 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணத்தை உடனடியாக அளிக்க கேரளம், தமிழக அரசுகள் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணைக் குழு பரிந்துரைக்க வேண்டும். இந்தப் பேரிடர் திட்டத்தை துணைக் குழு தயாரிக்க வேண்டும். துணைக் குழு எடுக்கும் முடிவுகளை கேரளமும், தமிழகமும் அமல்படுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com