பழனியில் கோயில் திருவிழாவில் அதிகமான ஒளி உமிழும் மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண்எரிச்சல் ஏற்பட்டு சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஜவஹர்நகரில் கடந்த மூன்று நாள்களாக கோயில் திருவிழா நடைபெற்று வந்தது. இதற்காக அப்பகுதியில் அதிக ஒளியை உமிழக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது சில மின் விளக்குகள் வெப்பம் தாங்காமல் வெடித்துள்ளன. இந்த நிகழ்ச்சியை 500-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்த்துள்ளனர்.
நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு நள்ளிரவு வீட்டுக்கு சென்றவர்களுக்கு, சனிக்கிழமை காலை கண்ணை திறக்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பழனி அரசு மருத்துவமனையில் ஜவஹர் நகரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குவிந்தனர்.
உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிக ஒளி உமிழும் விளக்குகளை நீண்ட நேரம் பார்த்தவர்களுக்கு கண் கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் ஓய்வு எடுத்தால் போதுமானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.