சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க தமிழக பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் உடல்நாத் குறைபாடு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 16-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடலானது 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் ஆகஸ்ட் 17-ம் தேதி டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வாஜ்பாயின் அஸ்தியை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கையாற்றில் விரைவில் கரைக்க உள்ளனர்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க தமிழக பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அடையாறு, ஸ்ரீரங்கம், வைகை, பவானி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அஸ்தி கரைக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.