சிபிஎஸ்சி தரம் குறைந்து விட்டதா?: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி 

நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் குறைந்து விட்டதா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஎஸ்சி தரம் குறைந்து விட்டதா?: உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி 

சென்னை: நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் குறைந்து விட்டதா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளை சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இதனையடுத்து என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அந்தப் பதில் மனுவில், வாழ்க்கைக்குத் தேவையான அறிவைப் போதிக்கும் இடமாக திகழ வேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரக மந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.கிருபாகரன் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

"குழந்தைகளின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது. ஒருபோதும் கல்வி அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கக் கூடாது. குழந்தைகளின் குறைந்தபட்ச தூங்கும் நேரத்தை உறுதி செய்ய வேண்டும்.

போதிய தூக்கம் இல்லாமல் போனால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பென்சில் கூட கொடுக்கக் கூடாது. மன அழுத்தம் இல்லாமல் உற்சகமான கற்றல் சூழலில் படிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.

எனவே, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அதிகமான புத்தகங்களை கொடுக்கக் கூடாது, அவர்கள் பொதி சுமப்பவர்கள் அல்ல. இது குறித்து சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி அதிகாரிகள் பறக்கும் படையை அமைத்து வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மாநில மொழி பாடத் திட்டம், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களில் பயிலும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். குழந்தைகளின் புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அதன் விவரங்களை மத்திய அரசு 4 வார காலத்துக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்  என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

பின்னர் இந்த வழக்கானது இம்மாத துவக்கத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, நீதிமன்ற உத்தரவின் அமலாக்கம் குறித்து மத்திய அரசு சார்பில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இரு முறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த உத்தரவை அமல்படுத்த சிபிஎஸ்இ தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த உத்தரவை வரும் 17-ஆம் தேதிக்குள் அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

இந்நிலையில் நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் தாழ்ந்து விட்டதா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கானது திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிபிஎஸ்சி சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தாக்கல் செயப்பட்டது. பின்னர் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

நடிகர், நடிகைகளை வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு   நாட்டின் முதன்மைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி-யின் தரம் குறைந்து விட்டதா? சிபிஎஸ்சிக்கு இத்தகைய கேள்விகள் தேவைதானா?

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. என்ற உத்தரவை எப்படி அமல் படுத்தப் போகிறீர்கள்? வெறுமே சுற்றறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது? இது தொடர்பாக போதுமான அளவில் விளம்பரம் செய்யபட வேண்டும்.

பிரபலமான தேசிய மற்றும் மாநில நாழிதழ்களில் விளமபரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.மூன்று வாரத்துக்குள் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும்.

அதே சமயம் நீதிமன்ற உத்தரவை சரியாக செயல்படுத்தாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்த நீதிபதி கிருபாகரன் வழக்கை செவ்வாயன்று ஒத்தி வைத்தார்     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com