கேரள நிவாரண நிதிக்கு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த தொழுநோயாளிகள், யாசகர்கள் நிதியுதவி அளித்தனர்.
கேரளத்தில் பெய்த பலத்த மழையால் அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் இன்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இவர்களின் துயர் துடைக்க நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருள்களும், நிதி உதவியும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடியில் இயங்கி வரும் அரசு தொழுநோய் இல்லத்தில் தங்கியுள்ள 38 பேர் சேர்ந்து தாங்கள் சேர்த்து வைத்திருந்த ரூ.1,035-ஐ கேரள நிவாரண நிதிக்கு திங்கள்கிழமை அளித்தனர். இதேபோல, திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் யாசகம் பெற்று வரும் கை, கால்களை இழந்த ஏழுமலை, தனது ஒரு நாள் யாசகப் பணம் ரூ. 100-ஐ அளித்தார்.