மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி, பொது மக்களின் அஞ்சலிக்காக பாஜக தலைமை அலுவலகத்தில் வரும் 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) வைக்கப்பட உள்ளது.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக் கொண்டு புதன்கிழமை மதியம் தில்லியில் இருந்து புறப்படுகிறோம். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.30 மணியளவில் வந்தடைந்த பிறகு, விமான நிலையத்தில் இருந்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் பின் வியாழக்கிழமை (ஆக. 23) முழுவதும் பொது மக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்படும் என்று தமிழிசை அறிவித்துள்ளார்.
அஸ்தி கரைப்பு: பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு வாஜ்பாய் அஸ்தியானது, ராமேசுவரம், வைகை ஆறு, காவிரி உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக அந்தந்த இடங்களுக்கு அஸ்தி எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.