சென்னை: அவரால் இட்லிக் கடை மட்டுமே வைக்க முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியைச் சீண்டும் விதமாக பாஜக மூத்த தலைவர் சுவாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுகவில் தலைமைப் பதவி தொடர்பாக சலசலப்பு உருவாகியுள்ளது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அநேகமாக அடுத்த தலைவராக தேர்வு செய்யப் பட வாய்ப்பு உள்ள நிலையில், அழகிரி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். திமுகவின் உண்மைத் தொண்டர்கள் தன் பக்கம்தான் உள்ளனர் என்று கூறியுள்ள அழகிரி, அதை நிரூபிக்கும் விதமாக வரும் செப்டம்பர் 5 -ஆம் தேதி , கருணாநிதி சமாதி நோக்கி ஒரு லட்சம் தொண்டர்களுடன் மவுன ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரால் இட்லிக் கடை மட்டுமே வைக்க முடியும் என்று அழகிரியைச் சீண்டும் விதமாக பாஜக மூத்த தலைவர் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வியாழனன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுகவில் ஸ்டாலின்தான் அடுத்த தலைவராகப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் அழகிரியால் இட்லி கடை மட்டுமே வைக்க முடியும்.
தமிழக பாரதிய ஜனதா தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் பின்னால் ஓடும் வேலையை மட்டுமே சென்றுகொண்டிருக்கிறது. அதை நிறுத்திவிட்டு தங்களுக்கான தத்துவத்தை முன்னிறுத்தினால் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும். வெறுமனே ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.