சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவர் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் வியாழனன்று ஆஜராகினர்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகங்களை அடுத்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது ஜெயலலிதாவோடு தொடர்புடைய பல்வேறு தரப்பினருக்கும் சம்மன்கள் அனுப்பி விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கடந்த வாரம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி மற்றும் நிதிஷ் நாயக் ஆகிய இருவரும் வியாழனன்று ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகினர்.
முன்னதாக அப்பல்லோ மருத்துவர்களான அருள் செல்வன் மற்றும் ரவி குமார் ஆகிய இருவரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதியும், பாஸ்கர் மற்றும் செந்தில் வேலன் ஆகிய இருவரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதியும் ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.