ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு: ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெ.வசிஷ்டர் தலைமையில் குழு அமைப்பு 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெ.வசிஷ்டர்  தலைமையில் குழு ஒன்றை அமைத்து  பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு: ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெ.வசிஷ்டர் தலைமையில் குழு அமைப்பு 

புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெ.வசிஷ்டர்  தலைமையில் குழு ஒன்றை அமைத்து  பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டது.

ஆனால், தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்ததோடு,  ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

மனு மீதான விசாரணையின் பொழுது காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகள் மீறப்படவில்லை என்றும் ஆளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையானது பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் நடைபெற்றது. அப்பொழுது ஆலை நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் மிக முக்கியமான நிர்வாகக் கோப்புகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவை ஆலையின் வளாகத்தில் உள்ளன. எனவே அவற்றைக் கையாளும் பொருட்டு குறைந்த பட்சமாக 30 நாட்களாவது ஆலை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வாதாடினார்.

ஆனால் தமிழக அரசுத் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கியமான கோப்புகளை அவர்கள் அழித்து விடக் கூடும் என்ற வாதம் அரசுத் தரப்பில் முன்வைக்கபட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் அதே சமயம், கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

இந்த மனுவானது மீண்டும் திங்களன்று பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட உள்ள குழுவின் தலைவராக கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி நியமிக்கப்பட கூடாது என்றும் வலியுறுத்தினார். இதற்கு தமிழக அரசுத் தரப்பு மற்றும் மற்றொரு மனுதாரரான வைகோவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று  பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்த குழுவானது 6 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெ.வசிஷ்டர்  தலைமையில் குழு ஒன்றை அமைத்து  பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி எஸ்.ஜெ.வசிஷ்டர் பஞ்சாப்  மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தவராவார். முன்னரே கூறி இருந்த படி இந்தக் குழுவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது. இவர்களது பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்குழுவுக்கு குறிப்பிட்ட ஆலை அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எல்லா விதமான ஆய்வுகளையும் செய்ய உரிமை உள்ளது. இக்குழு அளிக்க உள்ள அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த ஆலையின் செயல்பாடுகள் தொடர்பான உரிய முடிவு எடுக்கப்படும் என்பதால் இக்குழு உருவாக்கமானது முக்கியத்துவம் பெறுகிறது.

அத்துடன் இந்த குழு மேற்கொள்ளும் ஆய்வு தொடர்பான எல்லா செலவுகளையும் தமிழக அரசுதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com