மதுரை: சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரத் திட்டமிட்டதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் திமுகவின் அழைப்பை ஏற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வ்ருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரத் திட்டமிட்டதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்த அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
பல்வேறு விஷங்களில் கருணாநிதி அவர்களின் பங்களிப்பினை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில்தான் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறிய விஷயத்துடன் அரசியலை முடிச்சுப் போட வேண்டிய அவசியம் இல்லை.
மறைந்த கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகை தந்தார்கள். அதைப் போலத்தான் இதுவும். எனவே இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.