திருச்சி: வெள்ளத்தால் உடைந்த முக்கொம்பு அணை மதகுகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த பொழுது, அவர்களின் படகு வெள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.
கர்நாடகாவில் கடந்த வாரம் பெய்த பெருமழையின் காரணமாக காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக முக்கொம்பு அணையில் 9 முதல் 16 வரையிலான மதகுகள் உடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் அதனை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமியின் ஆணையின் படி மதகுகளை சீரமைக்கும் பணி முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் வெள்ளத்தால் உடைந்த முக்கொம்பு அணை மதகுகளை சீரமைக்கும் பணியில் புதனன்று ஊழியர்கள் ஈடுபட்டிருந்த பொழுது, அவர்களின் படகு வெள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது.
புதன் காலை ஊழியர்கள் இருவர் சிறிய அளவிலான பைபர் படகு ஒன்றின் மூலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக நீரின் அளவு அதிகமானது. இதனால் அவர்கள் சென்ற படகானது மதகுகள் உடைந்த இடைவெளிப் பகுதியினை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கவும், பதற்றத்தில் ஒருவர் அதில் இருந்து குதித்து உடைந்த ஒன்பதாம் மதகின் பகுதி ஒன்றில் ஏறி விட்டார். மற்றொருவர் படகுடன் சிறிது தூரம் சென்று ஒன்பதாம் மதகின் பின்புறம் உள்ள பகுதியில் குதித்து அங்கு இருக்கிறார்.
எனவே இருவரும் ஒன்பதாம் மதகின் பின்பக்கத்தில் பாதுகாப்பாக உள்ளனர். விபரம் அறிந்தும் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், மீனவர்கள் பயனப்டுத்தும் படகு ஒன்றின் மூலமாக அவர்களை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறக்குறைய ஒரு மணி நேர போரட்டத்திற்குப் பிறகு ஊழியர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.