மதுரை: மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு 45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் துவங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறவுள்ளன.
இதற்காக கோ.புதுப்பட்டியில் வருவாய்த்துறையினர் வசம் உள்ள பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதி என வரையறுக்கப்பட்டு, 198.27 ஏக்கர் நிலத்தினை சுற்றி எல்லைப்பகுதியில் கொடிகளை நடப்பட்டுள்ளன.
மின் வாரியத்துறையினர் இந்த இடத்தில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்ம்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எய்ம்ஸ் கட்டுமானக் குழுவினரும் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கடந்த மாதம் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசினாய் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை தொடங்குவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் அஸ்வினி குமார் சௌபே, அனுப்பிரியா படேல் ஆகியோரிடம் பேசினேன். அப்போது, டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவையிடம் இது தொடர்பாக குறிப்பு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மருத்துவமனைக்கான நிதி ஒப்புதல் உள்பட அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், வெகுவிரைவில் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேநேரம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது செயல்படத் துவங்கும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம அளிக்க வேண்டும் என்று கூறி,மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பாக விளக்கமளிக்க கோரி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு உயர் நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் துவங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கானது வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 'எய்ம்ஸ் கட்டுமானக் குழுவினரின் ஆய்வறிக்கை அமைச்சரவையின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் துவங்கும்.
இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.