புதிய அணை கட்டுவதற்காக மேக்கேதாட்டுவில் கர்நாடக அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். இந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்காக நிபுணர் குழுவுடன் டிசம்பர் 7-ஆம் தேதி ஆய்வு நடத்த உள்ளதாக கர்நாடக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக அமைச்சரின் இந்த முயற்சியை ஆரம்பத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நதி நீர் பங்கீட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.