விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு கையில் அரிவாளை வைத்தபடி சமூகவலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
இதற்கிடையே சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த சமயத்தில், விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு கையில் அரிவாளை வைத்துக்கொண்டு இரு இளைஞர்கள் அதிமுகவினருக்கு விடியோ வழியாக மிரட்டல் விடுத்தார்கள். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.
ஆளில்லாத சமயத்தில், பேனர்களைக் கிழித்துள்ளீர்கள். மொத்த விஜய் ரசிகர்களும் ஒன்று சேர்ந்தால், அதிமுக-வில் ஒருவரும் உயிருடன் இருக்கமாட்டீர்கள். இப்போதும் எங்களால் உங்களை வெட்ட முடியும். ஆனால் விஜய் ரசிகர்கள் இப்படிச் செய்தார்கள் என அவருடைய பெயர் கெட்டு விடும். இதனால், அடங்கிப் போகிறோம் என்று அந்தக் காணொளியில் பேசியிருந்தார்கள்.
இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரகாஷ் என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, விஜய் ரசிகர்கள் என கூறிக் கொண்டு அரிவாளுடன் சமூகவலைதளத்தில் விடியோ வெளியிட்ட 2 பேர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் 044 - 23452348, 23452350 ஆகிய எண்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்தனர்.
இந்நிலையில், அந்த விடியோவில் மிரட்டிய நபர்கள் லிங்கதுரை மற்றும் சஞ்சய் ஆகியோர் என்பதும், மேற்படி விடியோவை பதிவு செய்து வெளியிட்டவர் அனிஷேக் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இவர்களுள் சஞ்சய் மற்றும் அனிஷேக்கை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், இந்த குற்றச்செயலுக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.