மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய 45 மாதங்களுக்குள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என 2015 பிப். 28 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், 2018 ஜூன் 20ஆம் தேதி தான் மதுரையில் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது மிகவும் தாமதமானது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது. எனவே, மதுரை மாவட்டம் தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பதை அரசிதழில் வெளியிடவேண்டும். மத்திய அமைச்சரவையைக் கூட்டி ஒப்புதல் பெறவேண்டும். கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தி, தேவையான நிதியை விரைந்து ஒதுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, நிதிக்குழு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் ஒப்புதல் கிடைத்தவுடன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, அடுத்த 45 மாதங்களுக்குள் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையேற்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.