திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், அவரது மனைவி கெளசல்யா மீது கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம். மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேசமயம், இந்த வழக்கிலிருந்து கெளசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், இணையேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு கோவை வெள்ளலூரை சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை கோவையில் ஞாயிற்றுக்கிழமை மறுமணம் செய்து கொண்டார்.