மத்தியில் ஆளும் பாஜக அரசு மத ரீதியாக நாட்டு மக்களை பிளவுபடுத்தி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டு சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு துறைகள் மட்டுமின்றி பல்கலைக்கழகம், கல்லூரிகளிலும் ஊழல் மிகுந்து காணப்படுவது வேதனையளிக்கிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயல் நிவாரணம், மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டில் சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், இல்லையெனில், தாங்களே தேதியை அறிவிப்போம் என சில அமைப்பினர் கூறியுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளபோது இதுபோன்ற கருத்துகளை மத்திய அரசு இதுவரை மறுக்கவில்லை.
சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாஜக தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகிறது. மத்திய பாஜக அரசு மத ரீதியாக நாட்டு மக்களை பிளவுபடுத்தி வருகிறது என்றார்.