புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்துக்குள் முழுமையாக மின் விநியோகம்

கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் ஒரு வார காலத்துக்குள் முழுமையாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்துக்குள் முழுமையாக மின் விநியோகம்

கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் ஒரு வார காலத்துக்குள் முழுமையாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
 நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 நாமக்கல் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 14 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,854 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
 விழா நிறைவில் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் 100 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பொருத்தவரை அங்குள்ள கிராம பகுதிகளில் 75 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை 80 சதவீதம் வரை வழங்கப்பட்டுவிடும்.
 புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்த வரை கிராமப் பகுதிகளில் 90 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத கிராமப்புறப் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
 இந்த மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அங்கு உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அங்கு கூடுதல் பணியாளர்களை அனுப்பியுள்ளோம். அங்கும் கூடிய விரைவில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொருத்த வரைக்கும் இரண்டு, மூன்று நாள்களில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கு ஒரு வார காலத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.
 விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் பல்வேறு இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சுமுக உடன்பாடு ஏற்பட்டு, அந்தப் பணிகள் தொடங்கப்படும்.
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உருவாக்கித் தந்துள்ளார். தற்போது புதிய மின் திட்டங்கள் நடைபெற்று வருவதால், இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் 4,000 மெகா வாட் வரை மின் உற்பத்தி உயரும். புதிய மின் பாதை அமைக்கப்பட்டால்தான் தமிழகத்துக்குத் தேவையான மின்சாரத்தை முழுமையாக வழங்க முடியும். இதனால் எதிர்காலத்தில் புதிய மின் பாதை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 மின் வாரியத்தில் உதவிப்பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக் கொடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திடம் கோரியுள்ளோம். இந்த மாதத்திற்குள் நடத்திக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 2,000 உதவியாளர்கள், 250 கணக்கு இளநிலை உதவியாளர்களைத் தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கஜா புயல் பாதிப்பு காரணமாக தாமதமாகி வருகிறது.
 அமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்ந்து உங்களுடைய ரகசிய ஆடியோ ஒன்றை டி.டி.வி. தினகரன் தரப்பினர் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தாராளமாக வெளியிடட்டும். எனக்கு மடியில் கனம் இல்லை. அவர்கள் வெளியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் குறித்த ஆடியோ விவகாரத்திலும் ஒன்றுமில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com