புயல் பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்று, செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கஜா புயல் வீசி நாள்கள் பல கடந்து விட்டன. இன்னமும் சுமுகமான நிலையை உருவாக்க இந்த அரசால் முடியவில்லை. புயலுக்கு முன்னரே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தால் இத்தகைய பாதிப்புகள் வந்திருக்காது. புயல் வந்த பிறகும் தமிழக அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. அறிவித்துள்ள நிவாரணங்கள் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போலவே உள்ளன. நிவாரணங்களை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணங்களை உடனடியாக செலுத்தும்படி மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஏற்கெனவே அனைத்தையும் இழந்தவர்கள் எவ்வாறு கல்விக் கட்டணங்களை செலுத்த முடியும். ஆகவே தனியார், அரசுப் பள்ளி, கல்லூரிக்கான கல்விக் கட்டணங்களை அரசே ஏற்று, அதை செலுத்த வேண்டும்.
அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித் தருவோம் என அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலான நிலங்கள் கோயில் இடங்களாகவும், மடத்துக்குரிய இடங்களாகவும் உள்ளன. அவற்றுக்கு பட்டா இல்லாமல் எவ்வாறு வீடு கட்ட முடியும்.
எனவே, முதலில் கோயில் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு உரிய பட்டா வழங்கி விட்டு, வீடு கட்டித் தர வேண்டும். மத்திய அரசிடம் கஜா புயலுக்கான நிதி கோர தமிழக முதல்வர், அனைத்துக் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
இடைத்தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. அதிமுக, பாஜகவை பொருத்தவரை உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலையும் நடத்த அவர்கள் தயாராக இல்லை. ஏனெனில் இடைத்தேர்தல் நடைபெற்றால், அவர்களால் ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியாது.
ஓய்வுபெற்ற பிறகு அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது. இவ்வாறு செய்வது அவர்களுக்கு கீழுள்ள ஊழியர்கள் அடுத்த நிலைக்கு வரமுடியாமல் போய் விடுகிறது என்றார்.