ஒரே கல்லில் 64 அடி உயர பெருமாள் சிலையை வடிவமைப்பதற்காக, வந்தவாசி பகுதியில் இருந்து பெங்களூரு கொண்டு செல்லப்படும் 380 டன் கல் பாறையை ஏற்றிய லாரியின் டயர்கள் அடிக்கடி மண்ணில் புதைவதாலும், டயர்கள் வெடிப்பதாலும் லாரியை நகர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஸ்ரீகோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில், ஒரே கல்லினாலான சுமார் 64 அடி உயர ஸ்ரீவிஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை, ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட தெள்ளாறை அடுத்துள்ள கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக் குன்றிலிருந்து சுவாமி சிலை செய்வதற்காக சுமார் 380 டன் கல் பாறையும், ஆதிசேஷன் சிலை செய்வதற்காக சுமார் 230 டன் கல் பாறையும் அறுத்து எடுக்கப்பட்டன. இவற்றில், முதல்கட்டமாக பெருமாள் சிலை செய்வதற்கான கல் பாறை மட்டும் கடந்த சில நாள்களுக்கு முன் 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு அங்கிருந்து பெரும் முயற்சிக்குப் பின்னர் கொரக்கோட்டை - செட்டிக்குளம் சாலைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால், இந்தச் சாலையில் லாரியின் டயர்கள் அடிக்கடி மண்ணில் புதைவதாலும், டயர்கள் வெடிப்பதாலும் லாரியை நகர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்னும் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள தெள்ளாறு - தேசூர் இரட்டை வழி தார்ச்சாலையை லாரி அடைந்தவுடன் லாரியை நகர்த்துவதில் சிரமம் குறையும் என்று சிலை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சனிக்கிழமை அங்கு முகாமிட்டு, சாலையோரம் உள்ள முள்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, மின்வாரியத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டுள்ளனர். இதனிடையே, தெள்ளாறு - தேசூர் சாலையில் உள்ள சிறு பாலங்களின் மீது லாரி செல்லும்போது, பாலம் பாதிப்படையாமல் இருப்பதற்காக பாலத்தின் அடியில் இரும்புத் தூண்கள், மரத்துண்டுகளை வைத்து முட்டுக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.