மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுக 14 ஆண்டுகள் மத்திய அரசில் பங்கெடுத்துள்ளது.
2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில், அதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற தீர்ப்பை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. அப்போதும் வைகோ அவர்களுடன் கூட்டணியில் இருந்தார்.
வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக பல்வேறு நிலையில் இருந்துள்ளார். ஆனால், தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பில் எந்தவொரு திட்டங்களையும் பெற்றுத் தரவில்லை. ஆனால் அவர் இப்போது குற்றச்சாட்டு கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிட தீர்ப்பை பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. மாநில அரசின் உரிமைகளைக் காத்தவர் ஜெயலலிதாதான்.
அவரது வழிகாட்டுதலில் தற்போது நடைபெற்று வரும் தமிழக அரசு, மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். மேக்கேதாட்டு அணை விவகாரம் சம்பந்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்றார் அவர்.