வேன் மரத்தில் மோதியதில் தொழிலாளி சாவு

விழுப்புரம் அருகே சனிக்கிழமை அதிகாலை மினி டெம்போ வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்

விழுப்புரம் அருகே சனிக்கிழமை அதிகாலை மினி டெம்போ வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் நவீன்(26). இவர், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். அண்மையில் வேலைக்குச் சென்றபோது இவருக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.
 இதையடுத்து, நவீனை வீட்டில் விடுவதற்காக, அவரை அழைத்துக்கொண்டு சகதொழிலாளிகளான சென்னை, தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்த துரைராஜ் (50), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (40) உள்ளிட்ட 8 பேர், சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு டெம்போ வேனில் திருக்கோவிலூருக்கு புறப்பட்டனர்.
 வேனை ஆறுமுகம் ஓட்டி வந்தார். விழுப்புரத்தைக் கடந்து திருக்கோவிலூர் நோக்கி சனிக்கிழமை அதிகாலை வேன் சென்று கொண்டிருந்தது. காணை என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் இருந்த புளியமரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காணை போலீஸார் விபத்து குறித்து விசாரித்தனர். மேலும், காயமடைந்த நவீன், ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com